'பொக்ஸிங் டே' டெஸ்ட் ஆஸி. - இங்கிலாந்து இன்று களத்தில்
அவுஸ்திரேலிய – - இங்கிலாந்து அணிகள் மோதும் ‘பொக்ஸிங் டே’ டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்குகிறது.
ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் மூன்று டெஸ்ட்களில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று ஆஷஸ் கிண்ணத்தை மீண்டும் வசப்படுத்தி விட்டது.
இந்த நிலையில் அவுஸ்திரேலிய –- இங்கிலாந்து அணிகள் மோதும் 4ஆ-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்குகிறது.
இது ‘பொக்ஸிங் டே’ டெஸ்ட் என்று அழைக்கப்படுவது சிறப்பு அம்சமாகும்.
‘பொக்ஸிங் டே’ என்றால் ஒருவருக்கொருவர் குத்துச்சண்டையில் இறங்கும் நாள் என்று அர்த்தம் கிடையாது.
ஆஸி., இங்கிலாந்து, நியூஸி. போன்ற மேலைநாடுகளில் கிறிஸ்மஸ் பண்டிகை அன்று கிறிஸ்தவ தேவாலயங்களின் முன்பு பெரிய பெட்டியொன்றை வைப்பார்கள்.
ஆலயத்திற்கு வருபவர்கள் அதில் நன்கொடை வழங்குவார்கள்.
மறுநாள் (டிசம்பர் 26) அந்த பெட்டியை பிரித்து அதிலுள்ள பணம், பரிசுப்பொருட்களை ஏழை எளியோருக்கு வழங்குவார்கள். பெட்டியை திறக்கும் அந்த நாளை ‘பொக்ஸிங் டே’ என்கிறார்கள்.
முன்பு கிறிஸ்மஸ் பண்டிகை அன்றும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட கூலித்தொழிலாளர்கள் மறுநாள் தான் தங்களது குடும்பத்தினரை பார்க்க செல்வார்கள்.
அப்போது அவர்களது முதலாளிகள் கிறிஸ்மஸ் பெட்டியை பரிசாக கொடுத்து அனுப்புவது வழக்கம்.
அதன் அடையாளமாகவும் ‘பொக்ஸிங் டே’ என்ற பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.
1951-ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவில் ‘பொக்ஸிங் டே’என்ற பெயருடன் டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
சில காரணங்களால் குறிப்பிட்ட ஆண்டுகள் அந்த நாளில் டெஸ்ட் போட்டியை நடத்த முடியவில்லை.
இதன் பிறகு 1980ஆ-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ‘பொக்ஸிங் டே’ டெஸ்டை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பெற்று வருகிறது.
அந்தவகையில் இன்று ஆரம்பமாகும் 'பொக்ஸிங் டே' டெஸ்டில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக