ராஜிவ் கொலை: எழுவரின் விடுதலை தொடர்பில் மத்திய அரசு 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவிக்கும் பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் விடுதலை தொடர்பில் மத்திய அரசு மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது மத்திய அரசிற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க ஏதுவாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு 2016 ஆம் ஆண்டு தீர்மானித்த தமிழக அரசு இது தொடர்பில் மத்திய அரசிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியது.
எனினும், இந்த வழக்கை CBI விசாரிப்பதால் முடிவெடுக்கும் உரிமை தங்களிடமே உள்ளதாகத் தெரிவித்து உச்ச நீதிமன்றில் மத்திய அரசு வழக்குத் தொடர்ந்தது.
நேற்று (23) இடம்பெற்ற வழக்கு விசாரணையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இந்த விடயம் தொடர்பில் தமக்கே அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு தெரிவிப்பதால் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என தீர்ப்புரைத்தது.
இது தமிழக அரசிற்கு சார்பான பதில் என தமிழக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக