சம்பள பிரச்சினை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையால் நீர் விநியோக சபை ஊழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, காணப்படுகின்ற நிதி நிலமைக்கு அமைவாக நூற்றுக்கு 17.5 வீத சம்பள அதிகரிப்பை வழங்க உடன்பட்ட போதும், தொழிற்சங்கம் அதனை நிராகரித்துள்ளதுடன், 25 வீத சம்பள அதிகரிப்பை கோரியுள்ளதாக, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நீர் வழங்கல் சபையில் தற்போது இருக்கின்ற நிதி நிலமைக்கு அமையவும் ஏனைய செலவுகளை கருத்திற் கொண்டும், நியாயமான சம்பள அதிகரிப்புக்கு உடன்படுமாறு கேட்டுக் கொண்டதை தொழிற்சங்கம் நிராகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மக்களுக்கு தேவையான குடிநீரை வழங்கும் நடவடிக்கைக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில், அனைத்து தொழிற் சங்கங்களும் ஊழியர்களும் செயற்படுவார்கள் என்று நம்புவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக