சவூதி அரேபியாவில் பிந்திய இரவில் வெளியிடப்பட்ட அரச ஆணை மூலம் நாட்டின் இராணுவ தலைமை அதிகாரி உட்பட உயர்மட்ட இராணுவ தளபதிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
தரைப்படை மற்றும் விமானப்படை தளபதி பதவிகளிலும் சவூதி மன்னர் மாற்றங்கள் செய்துள்ளார்.
சவூதி அரேபிய உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டபோதும் இந்த மாற்றங்களுக்கான காரணம் கூறப்படவில்லை.
சவூதி கூட்டுப்படை கிளர்ச்சியாளர்களுடன் போரிடும் யெமன் யுத்தம் நான்காவது ஆண்டை நெருங்கி இருக்கும் நிலையிலேயே இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
சவூதியில் அண்மைக்காலமாக இடம்பெறும் அதிரடி மாற்றங்களின் பின்னணியில் முடிக்குரிய இளவரசரும் பாதுகாப்பு அமைச்சருமான சல்மான் இருப்பதாக நம்பப்படுகிறது.
கடந்த ஆண்டில் இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் பெரும் செல்வந்தர்கள் என சவூதியின் முக்கிய புள்ளிகள் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளில் தடுத்து வைக்கப்பட்டனர்.
பதவி நீக்கப்பட்டவர்களில் இராணுவ தலைமை அதிகாரி ஜெனரல் அப்துல் ரஹ்மான் பின் சலேஹ் அல் புன்யானும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இராணுவத்தைச் சேர்ந்த பலரும் ஏற்கனவே இந்த பதவி வெற்றிடங்களுக்கு நிரப்பப்பட்டுள்ளனர்.
இதேநேரம் முக்கிய அரசியல் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
இதில் மிக அரிதாக தொழிலாளர் மற்றும் சமூக அபிவிருத்தி பிரதி அமைச்சர் பதவி பெண் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு ஆசிர் மாகாணத்தின் ஆளுநராக இளவரசர் துர்கி பின் தலால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் சவூதியின் பெரும் செல்வந்தரான இளவரசர் அல்வலீத் பின் தலாலின் சகோதரராவார்.
ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட அல்வலீத் பின் தலால் இரண்டு மாதங்களின் பின்னரே விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக