பாகிஸ்தானில் ஜனாதிபதி மைத்திரிக்கு மகத்தான வரவேற்பு - Today News

Today News

Today News

Breaking News

W

2018-03-23

பாகிஸ்தானில் ஜனாதிபதி மைத்திரிக்கு மகத்தான வரவேற்பு




பாகிஸ்தான் குடியரசு தின கொண்டாட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசைனினால் விடுக்கப்பட்ட விசேட உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றிரவு 8 மணியளவில் இஸ்லாமாபாத் நகரின் நூர் பான் விமான நிலையத்தை சென்றடைந்தார்.

பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசைன், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை விமான நிலையத்தில் வரவேற்றார்.

21 மரியாதை வேட்டுக்கள் சகிதம் இராணுவ அணிவகுப்புடன் மிகுந்த அபிமானத்துடனும் கௌரவத்துடனும் ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று முற்பகல் இடம்பெறவுள்ள பாகிஸ்தான் குடியரசு தின கொண்டாட்டங்களில் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அமோக வரவேற்பளிப்பதற்காக பாகிஸ்தான் அரசாங்கம் சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

சுமார் மூன்று மணித்தியாலங்கள் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் இராணுவத்தினரின் பங்குபற்றலுடன் இடம்பெறவுள்ள விமான சாகச நிகழ்வும் கலாசார அம்சங்களும் இடம்பெறவுள்ளன.


இதனிடையே, புனரமைக்கப்பட்டுள்ள இஸ்லாமாபாத் நகரின் சர்வதேச பௌத்த நிலையத்தினை மீள திறந்து வைக்கும் நிகழ்வும் இன்றுபிற்பகல் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெறவுள்ளது. 

நேபாளம், இந்தியா, மியன்மார், கொரியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா, சீனா மற்றும் மலேசியா போன்ற பௌத்த மதத்தை பின்பற்றும் நாடுகளின் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் சஹீத்கான் அப்பாஸ் ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளதுடன், இரு அரச தலைவர்களுக்குமிடையிலான இருதரப்பு கலந்துரையாடலின் பின்னர் கல்வி, இளைஞர் விவகாரங்கள் மற்றும் சுற்றுலாத் துறைகளில் இருநாடுகளுக்குமிடையிலும் நான்கு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages