பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறும் நடவடிக்கையை சபாநாயகர் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற நடவடிக்கை இவ்வாறு இடம்பெறுமாயின், அரசியல் யாப்பு அதிகாரம் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படுமென்றும் அவர் கூறினார்.
இதற்கமைய செயற்பாடுகள் இடம்பெறுமாயின் பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர்களில் கலந்து கொள்வது குறித்தும் மீண்டும் சிந்தித்துப் பார்க்க வேண்டி ஏற்படுமென்றும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாளை காலை ஆளும் தரப்பு கட்சிக் கூட்டமொன்று நடைபெறவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு சபாநாயகரும் ஐக்கிய தேசியக் கட்சியும் பொறுப்புக் கூற வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் நிலையியற் கட்டளைகளுக்கு முரண்பட்ட வகையில் பக்கச் சார்பாகச் செயற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
பிரதமர் மற்றும் அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு. சபாநாயகர், நிலையியற் கட்டளைகளுக்கு அமைய பக்கச்சார்பின்றி செயற்படுவதன் மூலமே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்க முடியும் என்றும் அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக