குறைந்த வருமானம் பெறும் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அபிவிருத்தி திட்டங்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி - Today News

Today News

Today News

Breaking News

W

2017-12-23

குறைந்த வருமானம் பெறும் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அபிவிருத்தி திட்டங்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி

குறைந்த வருமானம் பெறும் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அபிவிருத்தி திட்டங்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி
  


2018ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களில் குறைந்த வருமானம் பெறும் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி அவர்களது வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டங்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

(22) முற்பகல் பொலன்னறுவை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற 'எழுச்சிபெறும் பொலன்னறுவை' மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கம் பாரிய அபிவிருத்தி திட்டங்களை பார்க்கிலும் குறைந்த வருமானம் பெறும் மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தி, அவர்களது வசதி வாய்ப்புகளை முன்னேற்றுகின்ற அபிவிருத்தி திட்டங்களுக்கு முன்னுரிமையளித்தது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, வறுமையினால் பாதிக்கப்பட்ட கிராம மக்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதை தற்போதைய அரசாங்கம் முக்கிய பணியாக மேற்கொண்டு வருகின்றதெனக் தொவித்தார்.


அபிவிருத்தி திட்டங்களை தயாரிக்கின்றபோது சிறந்த நிதி ஒழுங்குகளை பேணி நிதி முகாமைத்துவத்துடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, பொதுமக்களின் பணத்தை விரயம் செய்யாது அதன் உச்ச பயனை அவர்களுக்கு கிடைக்கச் செய்வது அதிகாரிகளின் பொறுப்பாகுமெனக் குறிப்பிட்டார்.

பொறுத்தமற்ற வகையில் மக்களின் பணத்தை விரயம் செய்து மேற்கொள்ளப்பட்டுள்ள சில திட்டங்கள் பற்றி தனக்கு கிடைத்திருக்கும் தகவல்கள் குறித்து அதிகாரிகளிடம் வினவிய ஜனாதிபதி, திட்டங்களை தயாரிக்கின்றபோது இடத்திற்கேற்றவகையில் பொருத்தானவற்றை மேற்கொள்ளுலது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கினார்.

நகரத்திலும் பாதையின்  இருபுறங்களிலும் உள்ள பாடசாலைகள், வைத்தியசாலைகள், சமய ஸ்தாபனங்கள் உள்ளிட்ட பொது இடங்களின் அபிவிருத்தி மட்டுமன்றி, கிராமப் புறங்களில் உள்ள மக்களுக்கு தேவையானவை குறித்து கவனம் செலுத்தி, அந்த வசதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, இது தொடர்பாக விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அபிவிருத்தியில் பின்னடைந்துள்ள பொலன்னறுவை மாவட்ட மக்களுக்கு அபிவிருத்தியின் நன்மைகளை கிடைக்கச் செய்யும் வகையில் ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் 'எழுச்சி பெறும் பொலன்னறுவை' மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சிதிட்டம் 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இத்திட்டங்களின் மூலம் பொலன்னறுவை மாவட்டத்தையும் 2018- 2019 காலப் பகுதியில் அபிவிருத்தி அடைந்துள்ள மாவட்டங்களின் நிலைக்கு மேம்படுத்த  முடியும் என்றும்  ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மாவட்டத்தின் பாடசாலை அபிவிருத்திக்காக நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், கிராமிய பாடசாலைகளின் அபிவிருத்திக்கு 2018ஆம் ஆண்டு முன்னுரிமையளிக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2018ஆம் ஆண்டு தேசிய உணவு உற்பத்தி ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதனுடன் இணைந்ததாக விவசாயத்திற்கும் பண்னை வள அபிவிருத்தி தொடர்பிலும் முன்னுரிமையளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பண்னை வள துறையில் புதிய ஆண்டின் நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தேசிய பால் பண்ணை கைத்தொழிலை பலப்படுத்துவதின் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, இதற்குத் தேவையான பசுக்களை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் கவனம்செலுத்தினார்.

மாவட்ட பிரதேச வைத்தியசாலைகளின் அபிவிருத்தி, குடிநீர் விநியோக திட்டங்கள், வீதி அபிவிருத்தி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அபிவிருத்தி, தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடங்களை பாதுகாத்தல், சமயஸ்தாபனங்களின் அபிவிருத்தி, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளினதும் அபிவிருத்தி தொடர்பில் முன்னெடுக்கப்படும் திட்;டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages