முறிகள் விநியோகம்: ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பிரதமர் அலுவலகம் அறிக்கை
முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பிரதமர் அலுவலகம் இன்று பிற்பகல் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
கடந்த 10 மாதங்களாக விசாரணைகளை மேற்கொண்ட முறிகள் ஆணைக்குழுவிற்கு பிரதமர் அலுவலகம் நன்றி தெரிவித்துள்ளது.
எவ்வித அழுத்தமும் இன்றி சட்டத்தை நடைமுறைப்படுத்த சந்தர்ப்பம் வழங்குவதே தமது அபிலாஷை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் நியமிக்கப்பட்ட கோப் குழுவின் அறிக்கை 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி பிரதமரின் ஆலோசனையின் படி சட்ட மா அதிபருக்கு அனுப்பப்பட்டதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைககள் தொடர்பிலான பொறுப்பினை 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிரதமர் மேற்கொண்டுள்ளதாகவும் 201 8ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனாதிபதியால் அது சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எனவே, தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கும் பிரதமர் அலுவலகம், நல்லாட்சி தேசிய அரசாங்கம் ஜனநாயகம் மற்றும் சட்டத்தை மதிக்கும் செயற்பாடுகளூடாக முன்னெடுக்கப்படுவதை மீண்டும் உறுதிப்படுத்த முடிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், ஆணைக்குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதைப் போன்று 2008 ஆம் ஆண்டிலிருந்து மத்திய வங்கியில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் உரிய விசாரரணைகளை மேற்கொண்டு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தேசிய அரசாங்கத்தின் இலக்கு எனவும் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக