புது மாப்பிள்ளை தலைமையிலான இந்தியா - தெ.ஆ. மோதும் டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்
Share
இந்திய –- தென்னாபிரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலேண்ட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலேண்ட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இந்திய அணி, தென்னாபிரிக்க மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இதனால் முதன்முறையாக தொடரை கைப்பற்றுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது மிகவும் சவாலானது என்பதில் சந்தேகம் இல்லை.
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களைக் கைப்பற்றி முத்திரை பதித்துள்ளது.
கடந்த 10 தொடர்களில் விளையாடிய இந்திய அணி தொடரை இழக்காமல் இருக்கிறது. தென்னாபிரிக்காவில் இந்த சாதனையை நீடித்துக் கொள்ள கடுமையாக போராட வேண்டும்.
தொடர்ச்சியாக டெஸ்ட் தொடரை இழக்காமல் இருக்கும் இந்தியாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆர்வத்துடன் தென்னாபிரிக்கா உள்ளது. மேலும் 2016ஆ-ம் ஆண்டில் இந்திய மண்ணில் தோற்றதற்கும் பதிலடி கொடுக்கும் வேட்கையில் உள்ளது.
துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் இருக்கும் தென்னாபிரிக்கா சொந்த மண்ணில் அபாரமாக விளையாடக் கூடியது. இந்த டெஸ்ட் போட்டி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக