ஜெரூசலத்தில் அமெரிக்கா தூதரகம் திறந்திருப்பது சட்டவிரோதம் எனக் கூறி பலஸ்தீனம் ஐ.நாவின் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
இஸ்ரேல் ஆக்கிரமித்த ஜெரூசலத்திற்கு தூதரகத்தை கொண்டு சென்று சர்வதேச சட்டத்தை மீறி இருப்பதாகவே அமெரிக்கா மீது நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதாக பலஸ்தீன வெளியுறவு அமைச்சர் ரியாத் அல் மாலிக்கி குறிப்பிட்டுள்ளார்.
ஜெரூசலத்தின் ஒரு பகுதிக்கு பலஸ்தீனர் உரிமை கோரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அந்த நகர் இஸ்ரேலின் தலைநகர் என்று கடந்த டிசம்பரில் அங்கீகரித்தார். இது அமெரிக்காவின் பல தசாப்தகால கொள்கையில் இருந்து விலகுவதாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து டிரம்ப் நிர்வாகத்துடனான அனைத்து தொடர்புகளையும் பலஸ்தீனர்கள் துண்டித்துள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவுக்கு எதிராக பலஸ்தீனர்கள் வழக்குத் தொடுத்திருப்பது இது முதல்முறை என்று பலஸ்தீன விடுதலை அமைப்பின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை கடைப்பிடிக்கும் கடப்பாடு நாடுகளுக்கு இருந்தபோதும் அதனை அமுல்படுத்துவதற்கான அதிகாரம் அந்த நீதிமன்றத்திற்கு இல்லை.
அமெரிக்கா கடந்த காலங்களில் இந்த நீதிமன்றத்தின் தீர்ப்புகளை பொருட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக