பெப்ரவரியில் தேசிய ஒலிம்பிக் சங்கத் தேர்தல் சுரேஷ் சுப்ரமணியம் களத்தில்
இலங்கை விளையாட்டுத்துறையில் கடந்த காலங்களில் பல சர்ச்சைகளை உருவாக்கிய தேசிய ஒலிம்பிக் சங்கத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி நடைபெற முடிவுசெய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் தேசிய ஒலிம்பிக் சங்கத் தலைவராக கடந்த 22 வருடங்களாக இருந்துவந்த ஹேமசிறி பெர்னாண்டோ இம்முறை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
இவர்கள் சார்பாக முன்னாள் டென்னிஸ் வீரரும் சிறந்த நிர்வாகியுமான சுரேஷ் சுப்ரமணியம், ஒலிம்பிக் குழு தேர்வில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார்.
ஒலிம்பிக் சங்கத்தின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா உட்பட தலைவர் பதவிக்கு போட்டியிடும் டென்னிஸ் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் ஆகியோர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே தான் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக சுரேஷ் சுப்ரமணியம் அறிவித்தார்.
தேசிய ஒலிம்பிக் குழுவானது சர்வதேச ஒலிம்பிக் குழுவின் ஆலோசனையின் கீழ் செயற்படுவதோடு, குழு தேர்வானது, ஒலிம்பிக் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.
சிரேஷ்ட டென்னிஸ் முகாமைத்துவரான இவர், 1981ஆம் ஆண்டு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆகிய இரண்டு பிரிவுகளிலும், இலங்கையின் முதலாம்தர டென்னிஸ் வீரராகத் திகழ்ந்தார்.
ஒலிம்பிக் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சுரேஷ் சுப்ரமணியம் தெரிவிக்கையில், எப்போதும் சிறந்த முகாமைத்துவத்தை வழங்கி, திறமைமிகு வீரர்களை பலப்படுத்துவதற்கான பல செயற்றிட்டங்களை நான் முன்னெடுக்கவுள்ளேன்.
மேலும் எதிர்காலத்தில் நாட்டிற்கு சிறந்த பெறுபேறுகளையும் புகழையும் அளிக்கும் வல்லமை ஒலிம்பிக் குழுவுக்கு உண்டு என நான் நம்புகிறேன் என தெரிவித்தார்.
அத்தோடு தேர்தலில் வெல்வதற்கே நாம் போட்டியிடுகிறோம். எமக்கு விளையாட்டு சங்கங்களின் ஆதரவு முழுமையாகக் கிடைத்துள்ளது.
அதனால் நாமே ஒலிம்பிக் சங்கத் தேர்தலில் வெற்றியீட்டுவோம் என்று ஒலிம்பிக் சங்க செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக