ஈரான் மீதான அமெரிக்க எண்ணெய் தடை அமுல் - Today News

Today News

Today News

Breaking News

W

2018-11-06

ஈரான் மீதான அமெரிக்க எண்ணெய் தடை அமுல்


தடையை ‘உடைக்க’ ஈரான் உறுதி   
ஈரானின் எண்ணெய் மற்றும் நிதித்துறை மீதான அமெரிக்காவின் தடைகள் நேற்று திங்கட்கிழமை தொடக்கம் அமுலுக்கு வந்தது.

ஈரான் மீதான இதுவரை இல்லாத கடுமையான தடைகள் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இந்த தடைகளை வர்ணித்திருக்கும் நிலையில் இந்த தடைகளை உடைப்பதாக ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரூஹானி உறுதி அளித்துள்ளார்.

2015 அணுசக்தி உடன்படிக்கையின் கீழ் விலக்கிக் கொள்ளப்பட்ட ஈரான் மீதான அனைத்துத் தடைகளையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் மீண்டும் அமுல்படுத்தியுள்ளது. 

ஈரான் மீது அழுத்தம் கொடுக்க தடைகள் கொண்டுவரப்படுவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

இதன்படி ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி, கடல் வணிகம் மற்றும் வங்கிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் எண்ணெய் வளம் கொண்ட இந்த நாட்டுக்கு வர்த்தகத்தில் ஈடுபடுவது கடினமாகியுள்ளது.

இதன்போது ஈரானின் 700க்கும் அதிகமான தனிநபர்கள், நிறுவனங்கள், கப்பல்கள் மற்றும் விமானங்கள் தடைப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் பிரதான வங்கிகள், எண்ணெய் ஏற்றுமதிகள், கப்பல் நிறுவனங்களும் உள்ளடங்கும். 

மேலும் அமெரிக்காவின் 100 மிகப்பெரிய நிறுவனங்கள் ஈரானில் இருந்து வெளியேறும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் “ஈரான் தொடர்ந்து எண்ணெய் விற்பனையில் ஈடுபடும்” என்று ரூஹானி உறுதியான தோரணையில் குறிப்பிட்டுள்ளார். “நாம் பெருமையுடன் தடைகளை உடைப்போம்” என்று பொருளாதாரத் துறை அதிகாரிகளை சந்தித்தபோது ரூஹானி குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் அணு செயற்பாடுகளை மட்டுப்படுத்துவதற்கு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் தொடர்ந்து நீடிக்கும் ஐரோப்பா தடைகளை தாண்டி ஈரானில் வர்த்தகத்தில் ஈடுபட உதவுவதாக உறுதி அளித்துள்ளது.

ஈரானுடனான வணிகம் சார்ந்த பணப்பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கு எஸ்.பி.வி மூலம் புதிய நேரடி பணப்பரிமாற்ற முறையை கடைபிடிக்க உள்ளதாக ஐரோப்பிய நாடுகள் அறிவித்துள்ளன. 

எனினும் இது எப்படி வெற்றி அளிக்கும் என்பதில் சந்தேகம் உள்ளது.

ஈரானின் அணுசக்தி திட்டங்களின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததை அந்நாடு ஏற்றுக்கொண்டதையடுத்து, அதற்கு கைமாறாக ஈரான் மீதான பல்வேறு தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் கடந்த 2015ஆம் ஆண்டு எட்டப்பட்ட உடன்படிக்கையின்படி விலக்கிக்கொண்டன.

இந்நிலையில், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இந்த உடன்படிக்கையை ‘கொடூரமான ஒப்பந்தம்’ என்று விமர்சித்ததுடன் அமெரிக்கா அதிலிருந்து வெளியேறுவதாகவும் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

அதன் விளைவாக 2016ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மற்ற நாடுகளினால் அறிவிக்கப்பட்ட பல்வேறு விதமான தடைகள் தற்போது ஒருதலைப்பட்சமாக அமெரிக்காவினால் விதிக்கப்பட்டு வருகின்றன.

உலக வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்கா, ஈரான் மீதான தடைகளை மீண்டும் அமுல்படுத்தப்போவதாக அறிவித்தவுடனேயே அந்நாட்டில் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சர்வதேச நிறுவனங்கள் ஈரானைவிட்டு விட்டு வெளியேற ஆரம்பித்திருப்பதால் மசகு எண்ணெயின் ஏற்றுமதி குறைந்து வருகிறது.

அமெரிக்கா விதித்துள்ள இந்த புதிய தடைகள் அனைத்தும் ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்களை பாதிக்காது.

ஆனால், இரண்டாவது கட்டமாக விதிக்கப்பட்டுள்ள தடைகளின்படி, ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஏதாவதொரு நிறுவனத்துடன் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமொன்று வர்த்தகத்தில் ஈடுபட்டால் அது பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

நேற்று ஈரானின் எண்ணெய் வணிகம் மட்டுமல்லாது அதன் வங்கித்துறை மீதான தடைகளும் அமலுக்கு வருகின்றன. 

கடந்த ஓகஸ்ட் மாதம் ஈரானின் தங்கம், உலோகம், வாகன உற்பத்தி போன்ற பல்வேறு துறைகளின் மீது தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தனது நட்பு நாடுகளான இந்தியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் சில கட்டுப்பாடுகளுடன் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்துகொள்வதற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் தயவில்லாமல் ஈரானுக்கு பணம் செலுத்தும் திட்டத்தை ஐரோப்பிய நாடுகள் முன்வைத்தாலும் கூட, அந்நாட்டுடன் வர்த்தகத்தை மேற்கொள்ளும் நிறுவனங்கள் வழக்கத்தைவிட அதிக அளவு பணத்தை செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்தின் எஸ்.பி.வி பணப்பரிமாற்ற திட்டத்தின் வழியே வர்த்தகத்தை மேற்கொண்டாலும் பல நிறுவனங்கள் அமெரிக்காவின் இரண்டாவது கட்ட தடையில் சிக்கும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

ஈரான் தனது எண்ணெய் ஏற்றுமதியை பூஜ்யத்திற்கு கொண்டுவர வேண்டுமென்று அமெரிக்கா வலியுறுத்தினாலும், அது நடக்கும்பட்சத்தில் உலகமெங்கும் வாகன எரிபொருளின் விலையில் பெரும் தாக்கம் இருக்குமென்பதால் தனது அழுத்தத்தை அமெரிக்கா தளர்த்திக்கொள்ள வாய்ப்பிருப்பதாக பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்கொட் லுௗகாஸ் குறிப்பிட்டுள்ளார்.

கடைசியாக 2010 முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஈரானின் எண்ணெய் வணிகத்தின் மீது சர்வதேச தடை விதிக்கப்பட்டிருந்தபோது அதன் ஏற்றுமதி அதிகபட்சமாக பாதியாக குறைந்தது.

தற்போதைய சூழ்நிலையில் ஈரானின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் தனது எண்ணெய் ஏற்றுமதியை நம்பியே உள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த புதிய தடைகள் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் அதன் பொருளாதாரம் சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும்.

எனினும் “அமெரிக்கா கொஞ்சம் கொஞ்சமாக பின்வாங்கி வரும் சூழ்நிலையில், ஈரான் மீது புதிய வகையில் அமெரிக்கா தொடுத்துள்ள இந்த தாக்குதல் வெற்றி பெறாது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை” என்று ரூஹானி கூறியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான ஈரானியர் “அமெரிக்கா ஒழிக” என்ற கோசத்துடன் பேரணி நடத்தினர். ஈரானின் பல நகரங்களிலும் மில்லியன் கணக்கான மக்கள் அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஈரான் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages